சபாவின் கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பணயத் தொகைக்காக கடத்தப்படும் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளில் சபாவின் கிழக்குக் கடற்கரை பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் 723 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்கள் அமைதியாக வாழவும், வர்த்தகத் துறை நம்பிக்கையுடன் செயல்படவும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கவும் முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2020 ஜனவரி முதல் பணயத் தொகைக்காக கடத்தப்பட்டதாக ஒரு சம்பவம்கூட பதிவாகவில்லை என்றும், இது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் குறிப்பிடத்தக்க சாதனை என்றும் சைஃபுதீன் தெரிவித்தார்.
மேலும், உலக அமைதிக் குறியீட்டில் 165 நாடுகளில் மலேசியா 12-ஆவது இடத்தில் உள்ளதாகவும், ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் 13-ஆவது மலேசியத் திட்டத்தின் காலகட்டத்தில், உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவை முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு சபாவுக்கான வெளிநாட்டு பயண எச்சரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சைஃபுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சபாவின் கிழக்குக் கடற்கரை தொடர்பான தங்களது பயண எச்சரிக்கைகளை மறுஆய்வு செய்து புதுப்பித்துள்ளதை வரவேற்ற அவர், அமெரிக்காவும் இதனை மறுபரிசீலனை செய்ய முன்வந்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்தார்.








