கோலாலம்பூர், பிப்ரவரி.05-
மாஜூ விரைவுச்சாலையில் நேற்று வியாழக்கிழமை மாலை, போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், நீல நிற விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்ற ஒரு வெள்ளை நிற எம்பிவி வாகனத்தைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய காணொளியின் அடிப்படையில் போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அக்காணொளியில் அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறிய இயலாத காரணத்தால் பொதுமக்களின் உதவியையும் போலீசார் நாடியுள்ளனர்.
இது குறித்து தகவல் தெரியும் பொதுமக்கள் தானாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறையின் தலைவர் ஸாம்ஸுரி இசா வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளைப் பொருத்துவது மோட்டார் வாகன விதிமுறைகள் 1959-ன் படி குற்றமாகும்.
முக்கியப் பிரமுகர் போல், காரில் ஒளிரும் விளக்குகளைப் பொருத்தி ஆள்மாறாட்டம் செய்வது, தண்டனைச் சட்டம் பிரிவு 170-இன் கீழ் குற்றமாகும் என்றும் ஸாம்ஸுரி இசா குறிப்பிட்டுள்ளார்.








