கோலாலம்பூர், பிப்ரவரி.04-
பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என உணவு மற்றும் பானத் தொழில்முனைவோருக்குச் சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்துச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் கூறுகையில், உணவு நச்சுத்தன்மை உள்ளிட்ட தீவிர அபாயங்களுக்குப் பொதுமக்களை ஆளாக்கும் எந்தவொரு செயலுக்கும் தமது அமைச்சு இடமளிக்காது என்றும், இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்றும் தெரிவித்தார்.
அனைத்து உணவு மற்றும் பான வணிகர்களும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான சிரம்பானில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் மீதமுள்ள உணவைக் கழுவி மீண்டும் பயன்படுத்துவது போன்ற பொறுப்பற்றச் செயல்கள் மக்களின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனறு அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தடுப்புத் தின கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் ஸுல்கிஃப்லி இதனைத் தெரிவித்தார்.








