கோலாலம்பூர், ஜனவரி.12-
கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாராவில் உள்ள HELP University தனியார் பல்லைக்கழகத்தில் இன்று காலையில் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒன்பது பேர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த 9 பேரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடி விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது எரிவாயு கசிவு காரணமாக நிகழ்ந்ததா அல்லது ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.








