இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய விமானப் போக்குவரத்து குழுமமான எம்ஏஜி (MAG), தனது 1,260 விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பரிசோதனையை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யாத விமானிகள் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மலேசிய விமானி, கடந்த வாரம் இந்தோனேசியாவின் சொயேகார்னோ ஹத்தா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 25 கிலோ எக்ஸ்டசி போதைப்பொருள் மாத்திரைகளுடன் பிடிபட்டார்.
அதன் மதிப்பு 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், சம்பவத்தின் போது அவர் பணியில் இல்லாததுடன், விமானத்தை இயக்கிய குழுவிலும் இடம் பெறவில்லை என்று எம்ஏஜி விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே இந்தச் சம்பவம், நிறுவனத்தின் தொழில்முறை நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று எம்ஏஜி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானிகளின் உடல்-மன தகுதி எப்போதும் சமரசம் செய்ய முடியாத அம்சங்கள் என்பதால், இனி அனைத்து செயலில் உள்ள விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் விமானப் பணியாளர்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.








