கோலாலம்பூர், டிசம்பர்.20-
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி காலை மணி 11:35 அளவில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள Rivercity கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்பு பகுதி அருகே உள்ள ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
ஆற்றில் சடலம் மிதப்பதைக் கண்டு வழிப்போக்கர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த போது, அவ்விடத்தில் சடலம் காணப்படவில்லை. பலத்த நீரோட்டத்தின் காரணமாகச் சடலம் கோம்பாக் ஆற்றை நோக்கி அடித்துச் செல்லப்பட்டது. பின்னர், சௌ கிட் போலீசார், ஜாலான் புத்ராவில் உள்ள Sunway Putra Mall அருகே ஆற்றிலிருந்து அந்தச் சடலத்தை மீட்டனர்.
உயிரிழந்தவர் செள கிட் பகுதியைச் சேர்ந்த 36 வயது மலாய்க்காரப் பெண் என்று அடையாளம் காணப்பட்டது. அவர் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமை காலை முதல் காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்து இருந்ததாக அஹ்மாட் சுகார்னோ தெரிவித்தார்.








