கோத்தா கினபாலு, பிப்ரவரி.23-
சபா கடலோரப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆராய்ச்சி மையமான NDRC எச்சரித்துள்ளது.
இது குறித்து NDRC வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளிடமிருந்து முழுமையான ஆய்வு முடிவுகள் வரும் வரை, குறிப்பாகக் கடற்கரையோர நகரப் பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்குத் தொடர் கண்காணிப்பு அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள கோத்தா கினபாலு மாநகரில் தற்போது அதிவேக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் அணைகள் போன்ற உள்கட்டமைப்புகளை வடிவமைக்கும் போது நிலநடுக்கத் தாக்கம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று NDRC தெரிவித்துள்ளது.








