சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலியான விநியோக ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக, மேஜர் அந்தஸ்தில் உள்ள 43 வயது ராணுவ உயர் அதிகாரி டி. விவேகானந்தன் மீது மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தெரண்டாக் இராணுவ முகாமில் பணியாற்றிய மேஜர் விவேகானந்தன், கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில், பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகப் பொருட்கள் வாங்கப்பட்டதாக பொய்யுரைத்து, போலியான விலைப்பட்டியல்களைத் தயாரித்து தற்காப்பு அமைச்சை ஏமாற்றியதாக 5 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மேஜர் விவேகானந்தன் மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனை தொடர்ந்து மேஜர் விவேகானந்தனுக்கு 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதித்த நீதிபதி எலிசபெத் பாயா வான், அந்த உயர் இராணுவ அதிகாரியின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மாதந்தோறும் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேஜர் விவேகானந்தனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அவருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.








