ராஜஸ்தான், நவ. 25-
இறந்து விட்டார் என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நபர், தகனமேடையில் இருந்து உயிரோடு எழுந்து வந்த அதிசயம் இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
எனினும் மீண்டும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் போது அந்த நபர் இறந்து விட்டார்.
ரோஹிதாஷ் குமார் என்ற 25 வயது இளைஞர் காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி ஆவார்.. உடல் நலக்குறைவு காரணமாக உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி மதியம் இரண்டு மணிக்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக உறவினர்களிடம் கூறி, இறப்பு சான்றிதழையும் வழங்கினர். இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து காவல்துறையினர் உதவியுடன் தகனம் செய்வதற்காக அந்த ஆடவர் உடல் இடுகாட்டிற்கு ஆம்புலன்ஸ் வண்டியில் எடுத்து செல்லப்பட்டது. தகன மேடையில் அவரது உடலுக்கு தீயிட முற்பட்ட போது அவரின் உடலில் அசைவு தெரிந்தது. அடுத்த வினாடியிலேயே அவர் உயிரோடு எழுந்ததை கண்டு, ஆச்சரியப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், அவரை மறுபடியும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அவர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். உயிரோடு இருந்த நபரை, இறந்து விட்டதாக கூறி, பிண அறைக்கு கொண்டு செல்ல இறப்பு சான்றிதழை வழங்கிய மூன்று மருத்துவர்கள், விசாரணைக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.








