கோலாலம்பூர், டிசம்பர்.12-
லஞ்ச ஊழல் வழக்கில் மூவார் எம்.பி. சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுதலை செய்யப்பபட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்து இருக்கும் பிராசிகியூஷன் தரப்பினர் மற்றும் தற்காப்பு வாதத்தை முன்வைத்துள்ள சையிட் சாடிக் ஆகியோர், இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா? என்பதை அமைதியுடன் ஆழமாக சிந்திக்குமாறு இரு தரப்பினருக்கும் கூட்டரசு நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த மேல்முறையீடு அவசியம்தானா? என்பது குறித்து முடிவு செய்வதற்கு இரு தரப்பினருக்கும் 7 நாள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அபு பாக்கார் ஜயிஸ் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் சமர்ப்பித்துள்ள வாதத் தொகுப்புகளை மறுமதீப்பீடு செய்யும் அதே வேளையில் இவ்வழக்கில் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதா? மேல்முறையீடு அவசியம்தானா? என்பது குறித்து இரு தரப்பினரும் சிந்திக்க வேண்டும் என்று நீதிபதி அபு பாக்கார் கேட்டுக் கொண்டார்.
தாம் சட்டத்துறை அலுவலகத்தில் துணை பப்ளிக் பிராசிகியூட்டராகப் பணியாற்றிய காலத்தில் இது போன்ற மேல்முறையீடுகள் அவசியம்தானா? என்பது குறித்து சக பணியாளர்களுடன் முதலில் ஒரு கூட்டத்தை நடத்தி விவாதிப்பது உண்டு என்று நீதிபதி அபு பாக்கார் குறிப்பிட்டார்.
உண்மையிலேயே இந்த மேல்முறையீட்டில் அடிப்படையான விஷயங்கள் அவ்வளவாக இல்லை என்றால் பிராசிகியூஷன் தரப்பு, நீதிமன்றத்தில் தாரளமாகச் சொல்லலாம். அதுவரை இந்த மேல்முறையீடு தொடர்பில் முடிவெடுப்பதை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நீதிபதி அபு பாக்கார் தெரிவித்தார்.








