கோலாலம்பூர், நவ. 19-
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் அபாயகரமாக வாகனத்தை செலுத்தி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியப் பின்னர் தப்பிவிட்டதாக கூறப்படும் பிஎம்டபிள்யூ ரக கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 7 வயது சிறுமி மரணம் அடைந்த வேளையில் அவரின் பெற்றோர் கடும் காயங்களுக்கு ஆளாகினர். இந்த விபத்து குறித்து பதிவான வாகனம் ஒன்றின் டாஸ் போர்ட் கேமராவின் காணொளியைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் வாக்குமூலம் அளிப்பதற்கு கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைமையகத்திற்கு வந்த 31 வயதுடைய அந்த காரோட்டி, கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் மோ சம்சூரி முகமட் இசா தெரிவித்தார்.
காணொளியின் பதிவின்படி மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய பிஎம்டபிள்யூ ரக கார், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெகுதொலைவில் சென்று நின்றது. அதன் பின்னர் U வளைவில் காரை திருப்பிக்கொண்டு, தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
கடும் காயங்களுடன் கணவன், மனைவி, அவர்களின் 7 வயது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டட வேளையில் அந்த பெண் பிள்ளை சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.








