உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மூடா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் எச்சரித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சின் செயல்பாட்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 2.39 பில்லியன் ரிங்கிட் அல்லது 12.8 விழுக்காடு நிதி குறைக்கப்பட்டுள்ளது. இது வெறும் நிதிச் சீரமைப்பு அல்ல, கல்விச் சூழலையே பாதிக்கும் ஒரு நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப் பணிகள் முடங்குவதோடு, கல்விக்கான கூடுதல் சுமை மாணவர்கள் மீது சுமத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி ஒழுங்குமுறை அவசியம் என்றாலும், அது கல்வியைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள டாக்டர் சிவபிரகாஷ் , இதற்கு தீர்வாக மூன்று முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்:
ஒன்றாவது, கல்விக்கழகங்களில் நிர்வாக வீணடிப்புகளைத் தவிர்க்க வெளிப்படையான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாவது, தொழில்நுட்பக் கல்வியான TVET மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் தனியார் துறையினரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
மூன்றாவது, வேலைவாய்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளின் செயல்திறன் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை மேம்படுத்த வேண்டும் ஒரு கல்விமானான டாக்டர் சிவபிரகாஷ் பரிந்துரை செய்துள்ளார்.
"மக்களின் அறிவுத்திறனில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டால், மலேசியாவால் உயர் வருமான நாடாக மாற முடியாது" என்று தனது அறிக்கையில் டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.








