கோலாலம்பூர், ஜனவரி.25-
மலேசியாவில் வட மாநிலங்களிலும் கிழக்குக் கரை மாநிலங்களிலும் தற்போது நிலவும் வறண்ட வானிலை, வடகிழக்கு பருவ மழையி இறுதிக் கட்டத்தில் ஏற்படும் வழக்கமான நிகழ்வு என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் – மெட்மலேசியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடைக் காலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி விட்டதாகவும், இது தெற்கு அரைக்கோளத்தில் தீவிரமாக இருக்கும் லா நீனா நிகழ்வின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்து காணப்படும் வேளையில், சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 34 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடனும் குறுகிய கால இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.








