கோலாலம்பூர், பிப்ரவரி.11-
மலேசியாவின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சியான TVET உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், "மலேசியா TVET ரேட்டிங்" (Malaysia TVET Rating) எனும் புதிய ஒருங்கிணைந்த தரவரிசை முறையை மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று மாலையில் நடைபெற்ற '5 நட்சத்திர TVET நிறுவனங்கள்' விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டமைப்பு அமல்படுத்தப்படும் என்றார்.

இது கல்வித் திட்டங்களின் தரம், நிறுவன நிர்வாகம் மற்றும் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தேசியத் தரநிலையாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான தரவரிசையில், சிறப்பாகச் செயல்பட்ட 62 TVET நிறுவனங்களைச் சேர்ந்த 155 பாடத்திட்டங்களுக்கு '5 நட்சத்திர அந்தஸ்து' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், திறன் மேம்பாட்டுத் துறை மதிப்பிட்ட 2,141 பாடத்திட்டங்களில் 96 சதவீதம் 'திறன்மிக்கவை' எனத் தரம் பெற்றுள்ளன. இது தேசிய இலக்கான 70 சதவீதத்தை விடப் பலமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துலக ஆலோசனை நிறுவனமான Boston Consulting Group நடத்திய ஆய்வில், 94 சதவீத நிறுவனங்கள் இந்தத் தரவரிசை முறையினால் தங்களின் செயல்திறன் அதிகரித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட Femac எனப்படும் மலேசியத் திறன் மேம்பாட்டுத் துறை அங்கீகாரம் பெற்ற மையங்களின் கூட்டமைப்புத் தலைவர், DR.RAVI RAMASAMY கூறுகையில் Femac கீழ் உள்ள அங்கீகாரம் பெற்ற 14 மையங்கள் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதாகவும், அந்த மையங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில், இந்த மலேசியா TVET ரேட்டிங் முறையானது பல்வேறு கல்வி நிதியுதவி முகமைகளுக்கும், அரசாங்கத்தின் செயல்திறன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டுக்கும் முக்கிய வழிகாட்டியாக அமையும். பொருளாதார அமைச்சின் ஆதரவுடன் உருவாக்கப்படும் இந்த 'தேசிய TVET செயல்திறன் குறியீடு', மலேசியாவைத் தொழில்துறை சார்ந்த திறன்மிக்க மனித வளத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அமைச்சர் ரமணன் தமது உரையில் உறுதியுடன் தெரிவித்தார்.








