கோலாலம்பூர், நவம்பர்.15-
நேற்று மாலை கேஎல்ஐஏ ஒன்றில், கனமழை காரணமாக, கூரையில் நீர் கசிந்த சம்பவத்தில், அடுத்த 90 நிமிடங்களில் அப்பிரச்சினை சரி செய்யப்பட்டதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் பயணிகள் செயலாக்கப் பிரிவு, டெர்மினல் இயக்கங்கள், ஏரோடிரேன், பயணப் பெட்டி கையாளும் அமைப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் முக்கியச் செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் எம்எஎச்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று மாலை 4.14 மணியளவில், இடியுடன் கூடிய கனமழை காரணமாக, கூரையில் விரிசல் ஏற்பட்டு மழை நீர், அருவி போல் விமான நிலையத்திற்குள் கொட்டியது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த விமான நிலைய அதிகாரிகள், அங்கு சீர்படுத்தும் பணிகளை மேற்கொண்டதோடு, பயணிகளுக்குத் தேவையான வழிகாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, அதன் மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதனை சரி செய்யும் வகையில் தொழில்நுட்ப மதிப்பாய்வுகள் நடைபெற்று வருவதாகவும் எம்எஎச்பி தெரிவித்துள்ளது.








