இராணுவ முகாமில் சக வீரர்கள் ஏழு பேரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயது இராணுவக் கோப்ரல் சுக்ரி தாசு, இன்று பெந்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி, பெந்தோங் இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் 24 வயதுடைய முகமது அமிருல் ரசிக் என்பவரைத் தாக்கிப் பலத்த காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதே நாளில் மேலும் ஆறு வீரர்களைத் தாக்கியதாக அவர் மீது தனித்தனியாக ஆறு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். ஆயுதக் கிடங்கைச் சுத்தம் செய்யும் பணியில் ஏற்பட்ட அதிருப்தியே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றம் அவருக்கு மொத்தம் 19,000 ரிங்கிட் ஜாமீன் தொகை அனுமதித்ததுடுன் , பாதிக்கப்பட்ட வீரர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையையும் விதித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








