புதிதாக வாங்கிய பெரோடுவா பேசா கார், வாங்கிய 8 மணி நேரத்தில் பழுதாகியது. அதனை சரி செய்ய அந்நிறுவனத்திடமே திருப்பி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெரோடுவாவிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காதது பெரும் வேதனையாக இருப்பதாக நாகக் கன்னி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் பெரோடுவாவின் வெளியீடான புதிய பேசா வகை காரை செகாமாடடில் உள்ள ஒரு பெரோடுவா நிலையத்தில் இருந்து நாககன்னி வாங்கியுள்ளார். இன்று வரை மாதாந்திர தவணைக் கட்டணமாக 537 வெள்ளியை முறையாக செலுத்தி வருவதாகவும், தமது கார் குறித்து பெரோடுவா இன்னும் எந்தப் பதிலும் கொடுக்காமல் அமைதியாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காரை காலை 11.00 மணிக்கு பெற்றதாகவும் இரவு 7.40 மணிக்கு தாம் அக்காரை முடுக்க முயற்சித்த நிலையில் அது தோல்வி அடைந்ததாகவும் குறிப்பிட்டார். எனவே, காரை பெரோடுவா சேவை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், காரின் எஞ்சின் பழுதடைந்துள்ளதாகத் தமக்கு தெரிவிக்கப்பட்டது என நாககன்னி கூறினார். '
கடந்த நவம்பர் 9 ஆம் நாள் அந்நிறுவனத்தார் தம்மைத் தொடர்பு கொண்டு, காரின் எஞ்சினில் பெரோடுவா பயன்படுத்தாத சர்க்கரை போன்ற வேற்று பொருள் இருப்பதாகக் கூறினர் என்றார்.
அந்த 8 மணி நேரத்தில் காரில் தாம் எந்தவித உணவுப் பொருட்களையும் கொண்டு செல்லாத நிலையில் காரின் எஞ்சினில் அப்படி இருக்க சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார் நாககன்னி.
மாற்று கார் வழங்கப்பட வேண்டும் என்றால், நாக கன்னி மீண்டும் கடன் பெற்று புதிய காரை வாங்க வேண்டும் என பெரோடுவா நிறுவனம் கூறியதாக அவர் மேலும் சொன்னார்.
அந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்த அவர், காரை விற்பனை செய்த தரப்பிடம் இருந்து எழுத்துப்பூர்வ பதில் ஏதும் இது வரையில் தாம் பெற வில்லை எனவும், தமது உரிமைக்காக அவர் போராட சித்தமாக இருப்பதாகவும் நாக கன்னி தமது முகநூலில் தெரிவித்ததாக சீனார் ஹாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.








