கெந்திங், மே.27-
இன்று பொது விடுமுறையை முன்னிட்டு பிரதான சுற்றுலாத் தலமான கெந்திங் ஹைலண்ட்ஸில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
மலை உச்சியில் நிலவும் இதமான குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க, தலைநகர் கோலாலம்பூர் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இங்கு குவிந்துள்ளனர். குறிப்பாக, கெந்திங் ஸ்கைவேர்ல்ட்ஸ் வெளிப்புற தீம் பார்க் மற்றும் ஸ்கைட்ரோபோலிஸ் உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் உள்ள பிரபலமான விளையாட்டுச் சவாரிகளில் பங்கேற்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
ஸ்கைஅவென்யூ (SkyAvenue) மற்றும் கெந்திங் பிரீமியம் அவுட்லெட்ஸ் ஆகிய முக்கிய ஷாப்பிங் தளங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்குள்ள உணவகங்கள், காபி கடைகள் மற்றும் உணவுக்கூடங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படுகின்றன.
அவானா ஸ்கைவே (Awana SkyWay) கேபிள் கார் நிலையங்களில் டிக்கெட் பெறவும், காரில் ஏறவும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதே வேளையில், கோலாலம்பூரில் இருந்து கெந்திங் நோக்கிச் செல்லும் மலைச்சாலையின் பல பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன. சிறிது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.








