சிலாங்கூர், ஜுலை 13-டிக்டாக் பிரபலமான ESHA என அறியப்படும் 30 வயது அ.ராஜேஸ்வரி எனும் பெண் இணையப் பகடிவதையால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில், அவருக்கு டிக்டாக்கில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் முன்னாள் போலீஸ் அதிகாரி உள்பட மூவர் மீது அவரது தாயார் புஷ்பா போலீசில் புகாரளித்துள்ளார்.
56 வயதுடைய அம்மாது, நேற்று மாலை மணி 6.34 அளவில், சிலாங்கூர், செலாயாங் போலீஸ் நிலையத்தில், அந்த புகாரை அளித்ததாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ACP NOOR ARIFFIN MOHAMAD NASIR தெரிவித்தார்.
ESHA-வின் வீடு, GOMBAK SETIA மக்கள் வீடமைப்பு திட்டம் - PPR-ரில் உள்ளதால், அம்மாதுவின் புகார் நேரடியாக செதாபாக் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக NOOR ARIFFIN கூறினார்.
முன்னதாக, நேற்று தனது மருமகனுடன் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையத்திற்கு வந்திருந்த ESHA-வின் தாயார், போலீசிடம் புகாரளித்த பிறகு, இரவு மணி 8 மணி வரையில் விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பா, தனது மகளைப் பற்றி டிக்டாக் நேரலையில் அவதூறாக பேசியவர்களின் பல காணொளிகள் ஆதாரங்களாக உள்ளதாக, கடந்த ஒரு வாரமாக சிலர், தம்மிடம் கூறிவருவதாக கூறினார்.
அவர்களில், முன்னாள் போலீஸ் அதிகாரியான ஒரு பெண், ESHA இதற்கு முன்பு போலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த விவகாரத்தை எழுப்பியிருந்ததாகவும் புஷ்பா குறிப்பிட்டார்.
தனக்கு எதிராக இணையப் பகடிவதை மேற்கொள்ளப்படுவதாக, டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்த ESHA, அதன் மறுநாளே தற்கொலை செய்துக்கொண்டது, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்திருந்த புகார் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், இதுவரையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








