பினாங்கு, நவ. 13-
மலேசிய மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் நலனை முன்நிறுத்தி, பல்வேறு தொண்டுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல்வேறு உதவிகளை வழங்கி வரும் புவநீதன் இளங்கோவனை தலைவராக கொண்ட கீத்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் தீபாவளி பொது உபசரிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு, தாசேக் குளுகோர், பொக்கோக் மாச்சாங், கெமாஸ் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட கீத்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் இந்த பொது உபசரிப்பில் சிறப்பு பிரமுகராக பினாங்கு ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா அகமட் பூஸி ஹாஜி அப்துல் ரசாக் கலந்து கொண்டார்.
ஆளுநருடன், பினாங்கு வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு யாயாசான் அமால் தி.ஓய்.தி. அறவாரியத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்ரீ ரோஸாலி முகமட் மற்றும் கீத்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் வாரிய இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சரா சின்னசாமி மற்றும் பினாங்கு மாநில அரசு ஏஜென்சிகளின் தலைமை இயக்குநர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அருஞ்சுவை உணவு, பாரம்பரிய பலகார வகைகள் என தீபாவளியின் பெருமையை உணர்த்தும் கலாச்சார நிகழ்வாக ஆடல், பாடல் இசை விழாவுடன் நடைபெற்ற இந்த பொது உபசரிப்புக்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கீத்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் தலைவர் புவநீதன் இளங்கோவன், டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, டத்தோ ஸ்ரீ ரோஸாலி முகமட் ஆகியோருடன் இணைந்து பினாங்கு ஆளுநர் துன் அகமட் புஸி கேக் வெட்டினார்.
நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் வசதி குறைந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மூத்தக்குடிமக்கள் என B40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு, நூறு வெள்ளி மதிப்புள்ள தீபாவளி அன்பளிப்பு கூடைகள் வழங்கப்பட்டன.

அறவாரியத்தின் இந்த அன்பளிப்பு கூடைகளை புவநீதன் இளங்கோவனுடன் இணைந்து பினாங்கு ஆளுநர் எடுத்து வழங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பினாங்கு ஆளுநர் அன்பளிப்புத்தொகையையும் வழங்கி சிறப்புசெய்தார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை தீர்ப்பதில் நடப்பு அரசாங்கத்துடன் இணைந்து தனது நிறைவான பங்களிப்பை வழங்கி வரும் கீத்தா அனாக் மலேசியா அறவாரியத்தின் தீபாவளி பொது உபரிப்பில் கலந்து சிறப்பித்த பினாங்கு ஆளுநருக்கும், இதர பிரமுகர்களுக்கும் அறவாரியத்தின் தலைவர் புவநீதன் இளங்கோவன் தமது உரையில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.








