தெமர்லோ, மார்ச்.13-
ரமலான் சந்தையில் கூட்ட நெரிசலைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெண்களை மானபங்கம் செய்து வந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகாங், தெமர்லோ, லூரா செமந்தான் ரமலான் சந்தையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த மானபங்கச் சம்பவங்கள் தொடர்புடைய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானதைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் ஹாசான் தெரிவித்தார்.
முதல் சம்பவம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி நடந்துள்ளது. சந்தையில் நடந்து சென்று கொண்டிருந்த 26 வயது பெண்ணிடம் அந்த நபர் சில்மிஷம் செய்துள்ளார்.
அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை 23 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களிடம் அதே நபர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார் என்று மஸ்லான் ஹாசான் குறிப்பிட்டார்.
மூன்று பெண்களும் அளித்த புகாரைத் தொடர்ந்து ஒரு வேலையற்ற 41 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








