தேசிய தின மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்பு துணையமைச்சருமான தியோ நீ சிங் முயற்சியில், மலேசியத் தமிழ் திரைப்படமான ‘இரும்புத் தோட்டம்’ கூலாய் மக்களுக்காக இலவசமாக சிறப்புத் திரையிடப்பட்டது.
மலேசியத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தியோ தெரிவித்தார்.

உள்ளூர் திரைப்படங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், ஒரு படைப்பை மட்டும் ரசிப்பதில்லை; நமது கலைஞர்களின் திறமை, முயற்சி மற்றும் கனவுகளுக்கும் ஆதரவளிக்கிறோம் என்றார்.
கூலாய் ஈயோன் பேரங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், படத்தின் முன்னணி கலைஞர்களான இர்ஃபான் ஸைனி, கே.எஸ். மணியம், ஆர். மோகன ராஜ், தினி சுந்தர் மற்றும் தயாரிப்பாளர் ஜெகன் ஜோன் பீட்டர் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியான ‘இரும்புத் தோட்டம்’, ஃபினாஸ் நிதியுதவி பெற்ற மலேசியத் தமிழ் குற்றப் புலனாய்வுத் திரைப்படமாகும்.
தேசிய தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு தேசியக் கொடிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. கார்த்தியாயினியும் கலந்து கொண்டார்.









