நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் தாமான் மிடா எம்ஆர்டி ரயில் நிலையக் கட்டடத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு நபர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அந்த ரயில் நிலையத்தின் கட்டட வளாகத்தில் தற்கொலை முயற்சி நடப்பதாக மதியம் 3.31 மணியளவில் NG999 அவசர அழைப்பு அமைப்பு மூலம் தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, பண்டார் துன் ரசாக் மற்றும் ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்பு நடவடிக்கை குறித்துப் பேசிய அதன் கமாண்டர் ஃபவ்சானா ஹஸ்னிடா மாமாட், "தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றபோது, அந்த நபர் கட்டடத்தின் விளிம்பில் மிகவும் ஆபத்தான நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். விரைந்த செயல்லபட்ட மீட்புப்படை குழுவினர், அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்," என்று தெரிவித்தார்.
மீட்கப்பட்ட நபர் மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு வீரர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தக் காயமும் ஏற்படவில்லை. சிறிது நேரத்திலேயே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.








