பினாங்கு, நிபோங் திபாலில் பட்டாசு கடை ஒன்று தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்த SOP நடைமுறைகளை மறுஆய்வு செய்ய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கும், ஊராட்சி மன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங், "மக்கள் பண்டிகைகளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பட்டாசு கடைகளுக்கும் குடியிருப்புகளுக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்வதுடன், ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கடையிலும் செயல்பாட்டில் உள்ள தீயணைப்பு கருவிகள் இருப்பது கட்டாயமாக்கப்படும்" என்றார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பட்டாசு கடையின் உரிமத்தை செபராங் பிறை மாநகர மன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கடை முற்றிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் பாதுகாப்பை முன்நிறுத்தி, வணிகர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.








