பேராக் மாநிலம், செகாரி, பந்தாய் ரெமிஸ்-இல் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், டிரெய்லர் லோரியுடன் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், காருக்குள் இருந்த நபர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 4.36 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் உதவி இயக்குநர் சபாரோட்சி நோர் அகமட் தெரிவித்துள்ளார்.
மஞ்சோங் மாவட்டத்திற்கு அருகிலுள்ள கம்பங் செமாங்காட், ஜாலான் பத்து 9 பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காரில் பரவிய தீயை அணைத்த பின்னர், அக்காருக்குள் கருகிய நிலையில் அடையாளம் காணப்பட முடியாத நிலையில் இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதான டிரெய்லர் லோரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.








