கோலாலம்பூர், மே.17-
கோலாலம்பூரில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரு சக ஊழியர்கள் உயிரிழந்தனர்.
அதிகாலை சுமார் 3.01 மணியளவில், நகர மையத்திலிருந்து கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலையை நோக்கிச் சென்ற சாம்பல் நிற ஹோண்டா சிட்டி இரகக் காரானது, ஜாலான் சுங்கை பீசி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தூணில் மோதி பின்னர் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அக்காரைச் செலுத்திய 29 வயதுடைய ஆடவரும், அவருடன் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஸம்ஸுரி இசா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள், சர்வதேச வங்கி நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் அம்பாங் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








