கூலிம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், குடிநுழைவு விதிகளுக்குப் புறம்பாக தங்கியிருந்த 18 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் தகவல் மற்றும் உளவுத்துறை தரவுகளின் அடிப்படையில், கெடா மாநில குடிநுழைவுத்துறை இந்த ‘OPS MAHIR’ நடவடிக்கையை மேற்கொண்டது. சோதனையிடப்பட்ட 31 பேரில், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் சிக்கினர். இவர்கள் செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது மற்றும் சமூகப் பயணப் பாஸை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 22 முதல் 45 வயதுடைய அந்த ஆடவர்கள், மேல் விசாரணைக்காகவும் ஆவணப்படுத்தலுக்காகவும் பாலிங் பெலாந்தேயிலுள்ள குடிநுழைவுத் துறை டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என கெடா மாநில குடிநுழைவுத்துறைத் தலைவர் முகமாட் ரிட்சுவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.













