கெடா மாநிலம், சுங்கை பட்டாணியில், வணிக வளாகத்திலுள்ள நகைக்கடை ஒன்றில், முகமூடி அணிந்த நான்கு ஆடவர்கள் சுத்தியல் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 7.20 மணியளவில், இரண்டு சந்தேக நபர்கள் நகைக்கடைக்குள் புகுந்து, மூன்று காட்சிப்பெட்டி கண்ணாடிகளை உடைத்து நகைகளை அள்ளிச் சென்றதாக கூறப்படுகின்றது. மற்ற இருவர், சுமார் 20 மீட்டர் தொலைவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உடனடியாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நகைக்கடையில் இருந்த இரண்டு ஊழியர்களும் எந்தவித காயமும் இன்றி தப்பியுள்ளனர்.
கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 7 லட்சம் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முழுமையான நகைப் பட்டியல் கிடைத்த பின்னரே இழப்பின் உண்மையான மதிப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.








