கோலாலம்பூர், டிசம்பர்.08-
திரங்கானுவில் வாகனம் ஒன்று சாலையை விட்டு விலகி, பாதாளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில், சாலைத் தடுப்பை அகற்றியது யார்? என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சு விசாரணை நடத்தி வருகின்றது.
இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியே, பொதுப்பணித்துறை இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அலெக்ஸண்டர், அங்கு வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பும், எச்சரிக்கைப் பலகையும், சில பொறுப்பற்ற நபர்களால் அகற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கோல பெராங், ஜாலான் கோல ஜெனெரிஸ் - சுங்கை காவி - ஆரிங் சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் இவ்விபத்தானது நிகழ்ந்தது.
இதில் 52 வயது ஹசான் ஷாஸாலி மற்றும் 34 வயது சுஸைமா சே அஸிஸ் ஆகியோர் பயணம் செய்த Toyota Fortuner வாகனம், சுமார் 60 மீட்டர் பாதாளத்தில் விழுந்து, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.








