- பிரதமர் ஏமாற்றம்
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அரச மலேசிய சுங்கத்துறை முகப்பிடங்களில் 7 தானியங்கி சோதனை சாதனங்களில் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏமாற்றம் தெரிவித்தார். இதர சாதனங்கள் அனைத்தும் பழுதடைந்து ஓராண்டு ஆகியும் அவற்றை சீர்படுத்தப்படாமல் இருப்பது குறித்து பிரதமர் கேள்வி எழுப்பினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு நேற்று திடீர் வருகை மேற்கொண்ட பிரதமர் அன்வார், சுங்கத்துறையின் தானியங்கி சோதனை சாதனங்கள் பல, செயல்படாமல் இருப்பது குறித்து தமது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தார்.
கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் சீன நாட்டுப் பெண்மணி கைது செய்யப்பட்டது, அது தொடர்பாக சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் ரகளை புரிந்த சம்பவத்தை தொடர்ந்து நடப்பு நிலையை பார்வையிடுவதற்கு பிரதமர் அன்வார் நேற்று திடீர் வருகை புரிந்தார்.
நாட்டின் முதன்மை நுழைவாசலாக விளங்கும் கோலாலாம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முகப்பிடங்களில் பயணிகள் சோதனை தொடர்பாக பயன்படுத்தக்கூடிய இத்தகைய அத்தியாவசிய சாதனங்களில் ஏற்படக்கூடிய பழுதுகள் உடனடியாக சீர்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் தமது திடீர் வருகையின் போது வலியுறுத்தினார்.
நிதி அமைச்சின் கீழ் சுங்கத்துறை செயல்பட்ட போதிலும், அமைச்சர் வருகை தந்து சோதனை செய்யும் வரையில் காத்திருக்க வேண்டாம் என்பதையும் நிதி அமைச்சருமான பிரதமர் நினைவுறுத்தினார்.








