புத்ராஜெயாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆர்க்கிட் மலர் கண்காட்சி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. 7 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் காடுகளிலும், வீடுகளிலும் பல்லுயிர் பன்மய சூழலில் வளரக்கூடிய அரிய வகையைச் சேர்ந்த ஆர்க்கிட் பூச்செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொட்டிகள், குழாய்கள், கற்கள், குட்டி மரத்துண்டுகள், கரி துண்டுகள் என கிடைத்த பொருட்களில் ஒட்டுண்ணியைப் போல் வளரக்கூடிய மிக அழகிய மலர் செடியான ஆர்க்கிட்டின் சிறப்புகளை விளக்கும் புத்ராஜெயா தாவரவியல் கண்காட்சியில் டென் என்ற ஒரு வகை அரிய ஆர்க்கிட் செடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டாக்டர் வான் அஸிசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒரு கலப்பின ஆர்க்கிட் தாவர வகையான Dendrobium, லண்டனில் உள்ள அரச தோட்டக்கலை சங்கத்தின் புதிய ஆர்க்கிட் hybrid -ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புத்ராஜெயா கழக மயத்தின் தொடர்புத்துறை இயக்குநர் நொர்சித்தா அப்துல் ரசாக் தெரிவித்தார்.
இந்த புதிய ஆர்க்கிட் கலப்பினமானது, பழுப்பு நிற பின்னணியுடன் கூடிய மலர்களையும், சிவப்பு, பழுப்பு நிற திட்டுகளுடன் நடுவில் வெள்ளி நிறத்துடன் ஐந்து சுருள் இதழ்களை உருவாக்கக்கூடியது. அரிய வாழிடங்களில் மட்டுமே வளரக்கூடிய தன்மையைக் கொண்ட இந்த அழகிய ஆர்க்கிட் மலர்கள், பார்வையாளர்களின் கண்களை கவரும் என்கிறார் நொர்சித்தா .








