சமூக வலைதள பிரபலமான சிக்கு சந்திரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், போலீஸ் விசாரணையின் போது, போலீசார் தன்னை அடித்து, மின்சாரம் கொண்டு தாக்கி, துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
40 வயதான கனரக வாகன ஓட்டுநரான அவர், விசாரணையின் போது பலமுறை தாக்கப்பட்டதாகக் கூறி செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்துள்ளார்.
குறைந்தது இரண்டு போலீஸ் அதிகாரிகள், தங்களது காலணிகளால், தனது தலையில் அடித்ததாகவும், மற்றொருவர் தனது கால்விரல்களுக்கு இடையில் பென்சிலை நுழைத்து நெரித்ததால் கடுமையான வலி ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளையில், தனது கைகளை, பின்னால் கைப்பிடியில் கட்டி வைத்தபின், பல அதிகாரிகள் அதன்மீது மிதித்ததால், வலியால் தான் அலறியதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடையாளம் தெரியாத ஒருவர், தன்னை அறைந்ததுடன், கண்கள் கட்டப்பட்ட நிலையில், அதிகாரி ஒருவர் தனது வலது காதில் மின்சாரத்தால் தாக்கினார் என்றும் அவர் விவரித்துள்ளார்.
தன்னிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காகவே இந்தத் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நபர் குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தின் போது, மலாய் மற்றும் மலாய் அல்லாத அதிகாரிகள் இருந்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது கட்சிக்காரர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதும், கடந்த செவ்வாய்க்கிழமை சுபாங் ஜெயாவில் இந்தப் புகார் அளிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் எஸ். வினேஷ், உறுதிப்படுத்தியுள்ளார்.








