கோலாலம்பூர், நவம்பர்09-
குடும்பம்தான் அறம், அன்பு, வளம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் என்று பிரதமரின் மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர். வான் அசிஸா வான் இஸ்மாயில் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகச் சவால்கள், வாழ்வியல் அழுத்தங்கள், மனநலப் பிரச்சினைகள் நிறைந்த இக்காலத்தில், குடும்பம் என்பது ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான புகலிடமாகவும், சக்தி ஆதாரமாகவும் செயல்பட வேண்டும் என்றார்.
"வெளியுலகத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், வீட்டைக் கட்டாயம் கட்டுப்படுத்த முடியும்" என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார், மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும், சமூக ஊடகப் பயன்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, திறந்த மனதுடன் பேச ஊக்குவித்தார். இந்தக் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த, அரசாங்கத்தின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல், அன்புப் பிணைப்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இன்று புத்ராஜெயாவில் அமைந்துள்ள Taman Wetland, Padang Semarak-இல் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப மாத நவம்பர் கொண்டாட்டத்தின் போது உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.








