மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை அரங்கேறாத ஒரு நிகழ்வு இன்று நிகழ்ந்தது. முன்னாள் பிரதமர்களான டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், டான் ஸ்ரீ முகிதீன் யாசின் மற்றும் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகிய மூவரும், வெவ்வேறு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒரே நாளில் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜராகினர்.
நஜிப், 1 எம்டிபி நிறுவனம் தொடர்ந்த பல பில்லியன் ரிங்கிட் சிவில் வழக்கை எதிர்கொண்ட நிலையில், முகிதீன், ஜனா விபாவா திட்டம் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் ஆஜரானார்.
மிகுந்த கவனத்தை ஈர்த்த இஸ்மாயில் சப்ரி, தனது சொத்துகளை அறிவிக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஒரே நாளில், ஒரே நீதிமன்ற வளாகத்தில், மூன்று முன்னாள் பிரதமர்கள் சட்டத்தின் முன் ஆஜரான இந்த நிகழ்வு, மலேசிய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத முக்கிய அத்தியாயமாகப் பதிவானது.








