ஈப்போ, நவம்பர்.21-
இந்திராகாந்தியின் 11 மாதக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு, தலைமறைவாகிவிட்ட அவரின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்வதற்கு நாடு தழுவிய நிலையில் தேடுதல் வேட்டையைத் தொடங்குமாறு அரச மலேசிய போலீஸ் படைக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மதம் மாறிய பத்மநாபனை, கிளந்தானை இலக்காக மட்டும் கொண்டிருக்காமல் நாடு தழுவிய நிலையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, அந்த நபரைக் கைது செய்து, அவரிடம் உள்ள இந்திராகாந்தியின் கடைசி மகளான பிரசன்னா டிக்ஷாவை மீட்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி நோர்ஷாரிடா அவாங் உத்தரவிட்டுள்ளார்.
அந்த நபரைக் கைது செய்வதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இன்னும் அமலில் இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு போலீஸ் துறைக்கு நீதிபதி நோர்ஷாரிடா அவாங் ஆணைப் பிறப்பித்தார்.
அந்த நபர், இன்னமும் மலேசியாவில் பதுங்கியிருப்பது, சாரா திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கிய தலா 100 ரிங்கிட்டைப் பயன்படுத்தியது மூலம் அம்பலமாகியுள்ளது. அத்துடன் அந்த நபர் தனது வாகனத்திற்கு அடையாள கார்டைப் பயன்படுத்தி, பூடி95 பெட்ரோல் திட்டத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
இதன் அடிப்படையில் அந்த நபர் இன்னமும் மலேசியாவில்தான் உள்ளார் என்று உறுதிச் செய்யப்பட்டதால் அவரைக் கைது கைது செய்வதற்கு கூடுதல் ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திராகாந்தி செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் போலீஸ் துறைக்குப் பிறப்பித்துள்ளது.








