மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான விசாரணைக் கோப்புகள், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ எம். குமார் கூறுகையில், வர்த்தகர் ஆல்பர்ட் தேய் மிரட்டப்பட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் மற்றும் வெலாசிட்டி கேபிட்டல் நிறுவனத்தில் பங்குகள் தொடர்பான புளூம்பெர்க் கட்டுரை மீதான விசாரணைக் கோப்புகள், கடந்த ஜூன் 4 அன்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்குத் தொடர்பாக கடந்த புதன்கிழமை புக்கிட் அமானில் அசாம் பாக்கியிடம் போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். தற்போது சட்டத்துறை தலைவரின் அடுத்தகட்ட அறிவுறுத்தல்களுக்காக போலீஸ் துறை காத்திருப்பதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.








