சிரம்பானில் நடைபெற்ற மாபெரும் நல்லிணக்க மக்கள் சந்திப்பில், தனது நீண்டகால அரசியல் போராட்டத்தையும் சோதனைகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'சிவாஜி தி பாஸ்' திரைப்படக் கதாநாயகனுடன் ஒப்பிட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உணர்வுப்பூர்வமாகப் பேசியது பலரது கவனர்த்தை ஈர்த்தது.
நேற்றிரவு அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய பிரதமர், "என் அன்பு நண்பர்களே, எனக்கு இப்போது ஒன்றும் வயதாகிவிடவில்லை. நான் அப்படியே 'சிவாஜி தி பாஸ்' திரைப்பட நாயகனைப் போன்றவன். அந்தப் படத்தின் கதாநாயகனைப் போல நானும் பலமுறை அடிபட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அத்தனை சவால்களையும் கடந்து இன்று இறுதியாக வெற்றி பெற்றுப் பிரதமராக நின்று கொண்டிருக்கிறேன்," என்று உணர்ச்சிப்பூர்வமாக முழங்கினார்.
தான் பிகேஆர் கட்சியைத் தொடங்கிய ஆரம்பக் காலகட்டத்தில், தங்களின் முகங்களைக் காட்டவே பயந்த 'டான்ஸ்ரீ' அந்தஸ்தில் உள்ள பெரும் புள்ளிகள், தனக்கு ஆதரவு தரவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், சிரம்பானில் உள்ள சாதாரண ஏழை எளிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள்தான் தனக்குத் துணிவோடு முதன்முதலில் தோள் கொடுத்து ஆதரித்தார்கள் என்று நெகிழ்ச்சியுடன் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
"நவீன உலக அரசியலில் என்னைப்போல் இத்தனை ஆண்டுகள் அடிபட்டு, உதைபட்டு, அவமானங்களைச் சந்தித்து, லாக்-அப்பில் தூக்கி வீசப்பட்டு, சிறைக்குச் சென்று மீண்ட தலைவர்கள் எவருமில்லை. மக்கள் நலனுக்காக அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்ட இந்த அன்வார் மீது கோபப்பட வேண்டாம். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடசான், டூசுன், டாயக் என அனைவரும் எனது குடும்பமே. உங்களுக்காக என் முழு ஆற்றலையும் வழங்கி உழைப்பேன்" என்றும் அவர் உருக்கமாக வாக்குறுதி அளித்தார்.
இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படுவதை இந்தியர்கள் தங்களின் தார்மீக கடமையாக கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மனிதவள அமைச்சர் ஆர். ரமணன், தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில், தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.








