May 5, 2026
Thisaigal NewsYouTube
வாடிக்கையாளர்கள் வருகை குறைவு: அன்புக்குரியவர் தின விற்பனையைப் பாதித்த சீனப் புத்தாண்டு விடுமுறை
தற்போதைய செய்திகள்

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு: அன்புக்குரியவர் தின விற்பனையைப் பாதித்த சீனப் புத்தாண்டு விடுமுறை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

இன்று Valentine's Day எனும் அன்புக்குரியவர் தினம் கொண்டாடப்பட்டு வந்த போதிலும், கோலாலம்பூரில் பூக்கடை வியாபாரி ரஞ்சிதா மலர் தம்பி இந்த ஆண்டு விற்பனை எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்காக மக்கள் நகரை விட்டு வெளியேறியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதிய நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு போதுமான பணியாளர்கள் இருந்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நு சென்ட்ரலில் (Nu Sentral) உள்ள Garden Party Decor கடையில் பணி புரியும் ரஞ்சிதா மலர் , வெள்ளிக்கிழமை தொடங்கிய சீனப் புத்தாண்டு விடுமுறை காரணமாகப் பெரும்பாலானோர் ஊருக்குச் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறார். விற்பனை மந்தமாக இருந்தாலும், அன்புக்குரியவர் தினமான இன்று மாலைக்குள் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். மாணவர்களைப் பகுதி நேரப் பணியாளர்களாக அமர்த்திய போதும், விற்பனை இன்னும் வேகம் எடுக்கவில்லை என்பது சவாலாக உள்ளது.

சாக்லேட்டுகள் கலந்த செயற்கை மலர் அலங்காரங்களை விட, வாடிக்கையாளர்கள் இன்னும் ரோஜா மலர்களையே அதிகம் விரும்புவதாக ரஞ்சிதா கூறினார். சப்ளையர்களிடமிருந்து விலை 5 விழுக்காடு உயர்ந்த போதிலும், தனது வாடிக்கையாளர்களுக்காக விலையை உயர்த்தவில்லை என்று அவர் தெரிவித்தார். மூன்று ரோஜாக்கள் கொண்ட பூச்செண்டு கடந்த ஆண்டைப் போலவே 89 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது. லாபத்தை ஈடுகட்ட சாக்லேட்டுகள், பலூன்கள் மற்றும் 39 ரிங்கிட் விலையில் Bento cakes அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Related News