செமினி, நவ. 13-
காஜாங், செமினி, பண்டார் டெக்னோலோஜியில் Bandar-ரில் உள்ள உணவு தயாரிப்பு தொழிற்சாலையின் மூன்று வளாக கட்டடங்கள் இன்று தீக்கிரையானது.
இத்தீச் சம்பவம் தொடர்பில் காலை 10.44 மணியளவில் அவசர அழைப்பை தீயணைப்பு, மீட்புப்படையினர் பெற்றதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
காஜாங், செமினி, பண்டார் துன் ஹுசேன் ஓன், ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய நிலையங்களிலிருந்து விரைந்த 5 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 27 வீரர்கள், கொழுந்து விட்ட எரிந்த தீயை கட்டுப்படுத்த சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடியதாக அகமட் முக்லிஸ் மொக்தார் குறிப்பிட்டார்.
மூன்று கட்டட வளாகங்களில் முதலாவது கட்டடம் 100 விழுக்காடு அழிந்த நிலையில் இரண்டாவது கட்டடம் 20 விழுக்காடு அளவிலும், மூன்றாவது கட்டடம் 30 விழுக்காடு அளவிலும் சேதமுற்றதாக அவர் தெரிவித்தார்.
நாலா புறமும் சூழ்ந்த தீ, காலை 11.45 மணிக்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் நிகழவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.








