கோலாலம்பூர், பிப்ரவரி.23-
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தொற்றானது, மலேசியாவில் பரவாமல் தொடர்ந்து தற்காக்கப்பட்டு வருவதாக தேசிய கால்நடை சேவைகள் துறையான DVS அறிவித்துள்ளது.
முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலைகள் மூலம் நிபா வைரஸ் நிலைமையானது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் DVS தெரிவித்துள்ளது.
விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களைத் தடுக்கும் பொறுப்பை வகிக்கும் DVS, மலேசியாவில் நிபா வைரஸ் தொற்று இல்லாத நிலையைத் தொடர்ந்து பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகின்றது.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அண்மையில் வெளிவந்த செய்திகளையடுத்து, உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட DVS, மலேசியாவிற்குள் அது பரவாமல் தற்காத்துள்ளது.
DVS மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில், ஆண்டுதோறும் பன்றிகளைக் கண்காணிக்கும் முன்கூட்டிய சோதனைகளும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, வீட்டுப் பன்றிகளிடமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளும், காட்டுப் பன்றிகளிடமிருந்து 48 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன.
அவை அனைத்தும் நிபா வைரஸுக்கு எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ளதாகவும் DVS இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.








