கிள்ளான், பண்டமாரான் பகுதியில் சட்டவிரோதமாக மானிய டீசலை கடத்த முயன்ற கும்பலை உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அதிகாரிகள் முறியடித்தனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் கிள்ளான், பண்டமாரான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 'பாண்டட்' ரக லாரி ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது லாரியின் பின்புறத்தில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 ராட்சத கொள்கலன்கள் இருப்பதையும், அதில் 3,400 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர் என்று அமைச்சின் மாநில அமலாக்க தலைமை அதிகாரி முகமட் ஹனிசாம் பின் கெச்செக் தெரிவித்தார்.
அங்கிருந்து தப்பியோட முயன்ற 30 வயதுடைய மலேசிய ஓட்டுநரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் டீசலை எடுத்துச் செல்வதற்கான எவ்வித முறையான ஆவணங்களும் இல்லை. லாரி, டீசல் மற்றும் எரிபொருள் மாற்றப் பயன்படுத்தப்பட்ட பம்புகள் என மொத்தம் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய 20,000 ரிங்கிட் மானியத் தொகை காப்பாற்றப்பட்டுள்ளது என்றுமுகமட் ஹனிசாம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.















