மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் , தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ் உட்பட நிறைய பொறுப்புகள் மாமன்னரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்பிஆர்எம் மும், பெட்ரோனாஸ் ஸும் மாமன்னரின் நேரடி பார்வையில் இருப்பது மூலம் அவை குறித்த விவரங்கள் மாமன்னரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அடுத்த ஆண்டு மாமன்னராக பொறுப்பையேற்க விருக்கும் சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த இரு அமைப்புகளும் நாடாளுமன்றத்தின் பார்வையின் கீழ் வைப்பதை விட மாமன்னரின் நேரடி பார்வையில் இருப்பது நல்லது என்று சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தையும் சிங்கப்பூர், The Straits Times நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
தங்களின் மூதாதையர் காலத்திலிருந்து வேட்டையாடுவதில் தாங்கள் வல்லவர்கள் என்றும், தாம் வேட்டைக்கு சென்றால் வெறுங்கையுடன் திரும்புதில்லை என்றும் உரிய பலனை எதிர்பார்க்க முடியும் என்றும் சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
தாம் கோலாலம்பூரில் பொறுப்பேற்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் வேட்டையாடப்படுவார்கள், அதன் பலாபலனை தாம் உறுதி செய்யப் போவதாக சுல்தான் தெரிவித்தார்.








