கெடா மாநிலம் சுங்கை பட்டாணியில் உள்ள மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்றுவந்த 13 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தொடை எலும்பு முறிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் புகார் பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த திங்கட்கிழமை அக்குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம், பிரிவு 31(1)(a) கீழ் அலட்சிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அக்குழந்தையின் தந்தையான நூர் ஃபட்லி ஷைதி மற்றும் அவரது மனைவி நூர் ஷாஹிலா அப்துல் ஹமீத் ஆகியோர் தங்கள் குழந்தையின் வலது தொடைப் பகுதியில் கட்டு போடப்பட்டிருப்பதைக் கண்ட பிறகே, இந்தச் சம்பவம் குறித்து அறிந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தபோது, அக்குழந்தை இயல்பான நிலையில் இருந்ததாகவும், இரு கால்கள் உட்பட அனைத்து உறுப்புகளையும் முறையாக அசைக்கக்கூடிய நிலையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








