புத்ராஜெயா,செப்டம்பர் 03-
நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் திடீரென ஏற்பட்ட குழியில் மக்கள் சிக்கி, உயிரிழந்த மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மொத்தம் நால்வர் பலியாகியுள்ளனர் என்று மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
இந்த மூன்று சம்பவங்களும் முறையே கெடா, ஜித்ரா, கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா மற்றும் சவராக் குணுங் தபாய் பாவ் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.
முதலாவது சம்பவம் கடந்த ஜுலை 30 ஆம் தேதி ஜித்ரா, பாயா கெமுண்டிங் தேசிய இடைநிலைப்பள்ளியின் முன், பாதாள சாக்கடையில் நிகழ்ந்தது.
4.5 மீட்டர் ஆழத்தில் பெரிய குழியில் சிக்கிய இரண்டு ஆடவர்கள் நச்சுாவாயுவினால் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டனர். அந்த சாக்டைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் போதுமான தற்காப்பு சாதனங்களுடன் களம் இறங்கி, 4.5 மீட்டர் ஆழத்திலிருந்து அவ்விருவரின் சடலங்களையும் மீட்டனர் என்று டத்தோ நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இரண்டாவது சம்பவம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்தது. நடைப்பாடை இடிந்து விழுந்ததில் 26 அடி பாதாள சாக்கடையில் விழுந்த ஓர் இந்தியப்பிரஜையான 48 வயது விஜயலெட்சுமி காணாமல் போனார்.
ஒன்பது நாட்களாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் நச்சுவாயு மற்றும் நீரோட்டம் கடுமையாக இருந்த பாதாள சாக்கடையில் முக்குளிக்கும் வீரர்கள் தொடர்ந்து உள்ளே செல்வது மிகவும் ஆபத்து என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை கடந்த வாரம் சனிக்கிழமை நிறுத்தப்பட்டதாக டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
மூன்றாவது சம்பவம் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சரவாக், குணுங் தானை -யில் நிகழ்ந்தது. இதில் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட 26 வயது யோகா அகிஸ்கா என்று அடையாளம் கூறப்பட்ட ஓர் இந்தோனேசியர், உயிரோடு புதையுண்டார். அவரின் சடலம் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி 90 மீட்டர் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக டத்தோ நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.








