வெளிநாட்டுத் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்துவதற்கான டிஜிட்டல் முறை குறித்து பரவி வரும் தகவல்கள் இன்னும் பரிசீலனை நிலையிலேயே உள்ளதாக மனிதவள அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இந்தத் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் அமைச்சு கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி, இடைத்தரகர்களின் தலையீடின்றி முதலாளிகளே நேரடியாகத் தொழிலாளர்களைத் தேர்வு செய்யும் முறையை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
இப்புதிய முறை மூலம் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் அதிகப்படியான வேலைவாய்ப்புச் செலவுகளைக் குறைக்கவும், 'கடன் பிணைப்பு' முறையை ஒழிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் MEF, FMM போன்ற முக்கிய அமைப்புகள் மற்றும் இந்தியா, இந்தோனேசியா போன்ற நட்பு நாடுகள் இந்த வெளிப்படையான டிஜிட்டல் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன என்பதையும் மனித வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தற்போதுள்ள FWCMS போன்ற அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும், நாட்டின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் படி வெளிநாட்டுத் தொழிலாளர் தேவையைக் குறைத்து, உள்ளூர்த் திறமையாளர்களை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.








