எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால், தென் தாய்லாந்து பகுதிகளுக்கு பயணம் செய்வதை, மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹரி ராயா பண்டிகை விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஹாட் யாய் மற்றும் சோங்க்லா போன்ற பிரபல சுற்றுலா இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த அறிவுரையானது வழங்கப்பட்டுள்ளது.
அவசர தேவையில்லை என்றால் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது நல்லது என்று சோங்க்லாவிலுள்ள மலேசிய தூதரகத்தின் தலைமைத் தூதர் அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தவிர்க்க இயலாத காரணங்களால் பயணம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலின் காரணமாக தாய்லாந்து மக்களிடையே ஏற்பட்ட பீதி காரணமாக தேவைக்கு அதிகமாகக் கொள்முதல் செய்வோரால் இந்த எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.








