சரவாக் மாநிலக் கொடியை மிதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் டிக்டாக் சமூக ஊடகப் பயனர் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு இரண்டு புகார்கள் கிடைத்துள்ளதாக கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு தெரிவித்துள்ளார்.
சுமார் ஐந்து விநாடிகள் கொண்ட காணொளியை டிக்டாக் பயனர் ஒருவர் பதிவேற்றியதாகவும், பின்னர் அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சமூக அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, தண்டனைச் சட்டம் பிரிவு 504-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








