மலேசியா, பிலிப்பைன்ஸிற்கு டீசல் விநியோகிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸிற்கு டீசல் வழங்கப்படுவதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரம் 'வைட்டோல்' என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்புடையது. அந்த நிறுவனம் சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெங்கராங்கிலிருந்து எரிபொருளைக் கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளது என்று இன்று கோலத் திரெங்கானுவில் மாணவர்களுடான சந்திப்பக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
விநியோகிக்கப்பட்ட டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானதோ அல்லது பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் தொடர்புடையதோ அல்ல. இது ஒரு தனியார் நிறுவனத்தின் வணிக நடவடிக்கை என்பதால் அரசாங்கம் இதில் தலையிடவில்லை.
மேலும் இந்த விநியோகத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பெட்ரோனாஸ் நிறுவனமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், இது போன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.








