பினாங்கு, கிங் ஸ்ட்ரீட்டில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மலேசிய சட்டத்துறையின் மூத்த வழக்கறிஞர் 88 வயது ஜி. சன் மார்கன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சட்டத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அஜிஸ் கூறுகையில் , தனது நீண்டகால நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 1974-ஆம் ஆண்டு லண்டனில் பாரிஸ்டர் பட்டத்திற்காக ஒன்றாகப் பயின்ற நாட்களை நினைவு கூர்ந்த நஸ்ரி, , சன் மார்கன் தனக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதம் அவரது 88-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதே அவர்களைப் பார்த்த கடைசித் தருணம் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
1978-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்த சன் மார்கன், மறைந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் கர்பால் சிங்கிடம் தனது பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் 'சன் அண்ட் அசோசியேட்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவி, பல தசாப்தங்களாகச் சட்டப்பணி ஆற்றினார்.
பினாங்கு வழக்கறிஞர் கழகத்தின் தலைவர் கௌரி சுப்பையா கூறுகையில், சன் மார்கன் ஒரு மதிக்கத்தக்க உறுப்பினர் என்றும், அவரது இழப்பு சட்டத்துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் புகழாரம் சூட்டினார்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் பினாங்கு துணை முதல்வர் ஜெகதீப் சிங் தியோ ஆகியோர் சன் மார்கன் தங்கள் குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பர் என்று கூறினர். ஆலோசனை மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்க ஒரு நன்மனிதரைத் தாம் இழந்துவிட்டதாக அமைச்சர் கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.








