எம்.குலசேகரன் தகவல்
இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேன்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள மித்ரா , இந்திய சமூகத்திற்கு உதவும் வகையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதிசெய்வதற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் இந்த சிறப்புப் பணிக்குழு, இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேன்மைக்கு எந்தெந்த ரூபத்தில் உதவ முடியும்? எத்தகை தரப்பினருக்கு இந்த நிதி சென்றடைய வேண்டும், ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி நிதி, முழுமையாக இந்திய சமுதாயத்திற்கு சென்றடைவதற்கு ஏற்படுத்தக்கூடிய வியூகங்கள் குறித்து இந்தச் சிறப்பு பணிக்குழு, மித்ராவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் என்று எம்.குலசேகரன் விளக்கினார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை ஏற்பாட்டில் மித்ரா நிதி தொடர்பாக, இந்திய சமூகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனடர்கள், மித்ரா வின் தலைமை இயக்குநர் ரவின்திரன் நாயர் மற்றும் மித்ரா அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட விளக்கமளிப்பு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் குலசேகரன் இதனை தெரிவித்தார்.
அதே வேளையில், மித்ரா வின் நிதியைப் பெறுவதற்கு, விண்ணப்பம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள 40 நாள் காலக்கெடு வரும் ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து இக்கூட்டத்தில் தாங்கள் வலியுறுத்தியதாக குலசேகரன் விவரித்தார்.
இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில், குலசேகரனுடன் கலந்துகொண்டவர்களில் கிள்ளான் எம்.பி. வீ.கணபதி ராவ், செகாமாட் எம்.பி. யுனேஸ்வரன், சுங்கை சிப்பூட் எம்.பி. கேசவன், செனடர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.








